ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன!
ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!!
செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக்
கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!!
உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!
காலிரண்டு மூன்றாகி காலங்கள் மொட்டாக!
மேலிருந்து அழைப்புவர மூன்றுகால் எட்டாக!!
மீளாத தூக்கத்தில் மூழ்கிவிட்ட தசைப்பந்து!
காலனாலே காலமாகி கவிபாடும் இசைச்சிந்து!!
ஒருதுளி விந்ததுவே அண்டத்தோடு கலந்துவிட
கருவானாய் தாய்வயிற்றில் கல்லறையில் மலர்ந்துவிட!
பிறந்தபோது பேர்வைத்துப் புகழ்கின்றார் பெற்றோர்!
இறந்தபோது பிணமென்று இகழ்கின்றார் உற்றார்!!
ஏனிந்த மாற்றமென்று எவரேனும் சொல்வீரா?
‘நான்யார்?’ தெரிந்துகொண்டு நமைநாமே வெல்வீரா?
No comments:
Post a Comment