இன்று சுதந்திர தினம்!
யோகயுவகேந்திராவின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!
நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்குத் தனது வாழ்வையே அர்ப்பணித்த அந்தத் தியாக ஆத்மாக்களை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்துகிறது யோகயுவகேந்திரா.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்! ..
எனச் சுதந்திரம் பெறப் பெற்றப் பாடுகளைப் பற்றிச் சொல்கிறான் ,வாழையடி வாழையாக வந்த சித்தர் கூட்டத்தில் தானும் ஒருவன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட எட்டயப்புரத்துச் சித்தன் பாரதி.
எனதுப் பால்யப் பருவத்தில்,சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வீரன் பகத்சிங், சுகதேவ்,ராஜகுரு, செங்கோட்டைச்சிங்கம் வீரன் வாஞ்சிநாதன்,போன்ற வீர இளைஞர்களின் தியாகம் எனக்குள் ஒரு துடிப்பை உருவாக்கி இருக்கிறது,
வரியாக, நெல் கட்டமாட்டேன் எனச் சூளுரைத்த நெல் கட்டான் செவல் பூலித்தேவன் ,......வீரபாண்டியக்கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி,மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், போன்ற அஞ்சா நெஞ்சர்களின் வீரமான மன உறுதியாலேயே நாம் சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.
இதையெல்லாம் அரசியல்வாதிகள் மேடை மேடையாகப் பேசுகிறார்களே நமது வலைத்தளத்தில் இது நமக்கு எதுக்கு என நீங்கள் கேட்பது
எனக்குப் புரிகிறது.
நண்பர்களே!
சுதந்திரப் போராட்டத்தில் இந்த வீரப் படையுடன் ஒரு "யோகப்படையும் " களமிறங்கியிருக்கிறது, ஞானச்சித்தன் பாரதி, ஆன்மீக விஞ்ஞானி அரவிந்தர், சுப்ரமணிய சிவா, நீல கண்ட பிரமச்சாரி....போன்ற இந்த யோக கூட்டத்தில் ஒரு முக்கியமான சிவராஜயோகியைப் பற்றியதுதான் இந்தப் பதிவு...
பராசக்தி தவிர மற்ற யாருக்கும் தான் அடிமையில்லை என்று தன்னைப் பறை சாற்றிக்கொண்டவன் ஞானச்சித்தன் பாரதி.........ஆனால் அவனே மூவருக்குத் தான் அடிமையென்றும், அதிலும் ஒரு சிவராஜ யோகியின் பாதங்களுக்கு நான் அடிமையென்றும் பறைசாற்றி இருக்கிறான் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா????? அந்த சிவராஜயோகியைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
மண்ணிய புகழ் பாரத தேவி
தன்னிருத் தாழினைக்கடிமைக்காரன்
இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம்
திலக முனிக்கொத்த அடிமைக்காரன்,
வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடுபோம்
அய்யன் பூவேந்திரனுக்கு அடிமைக்காரன்,
காலர் முன் நிற்பினும் மெய்தவறாத
பாலர்தனக் கடிமைக்காரன்
தான் தணலிட்டாலும் தருமமிடறாத
பிரம்மபாந்தவன் தாழினைக்கடிமைக்காரன். ......என்கிறான் பாரதி
இந்தப்பாடலில் தான், பராசக்திக்கு அடிமை,திலகருக்கு அடிமை, பூவேந்திரனுக்கு அடிமை எனக்கூறிய பாரதி.......பிரம்மபாந்தவன் எனும் இருபத்து மூன்று வயதே நிரம்பிய இளைஞரின் பாதங்களுக்குத் தான் அடிமை எனக்கூறுகிறான்.
யார் இந்த பிரம்ம பாந்தவன்??
திலகர் நடத்திய பத்திரிகையில் "கருப்பு ஆடுகளை பலியிட்டது போதும் இனி என் அன்னை காளிக்கு வெள்ளை ஆடுகளை பலியிடுங்கள்" என மறைமுகமாக ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதுகிறார் இளம் சிவராஜ யோகியான பிரம்மபாந்தவன். இதனை உணர்ந்துகொண்ட ஆங்கில அரசு, திலகர் மீதும்,அலுவகத்தில் அச்சடிக்கும்வேலை செய்து வரும் பூவேந்திரன் எனும் இளைஞர் மீதும், யோகி பிரம்மபாந்தவன் மீதும் வழக்குத் தொடர்கிறது.....
இதில் யோகி பிரம்மபாந்தவனை நாடு கடத்த உத்தரவிடுகிறது ஆங்கில அரசு.......இளம் யோகியை மாட்டு வண்டியில் ஏற்றி நாட்டின் எல்லைக்கு அழைத்து செல்கின்றனர் ஆங்கிலத் தளபதிகள் . "எனதுயிர் யோகபூமியான பாரத மண்ணிற்கேச் சொந்தம், இந்தப் பூதவுடலை மட்டுமே நீங்கள் அந்நிய மண்ணிற்கு எடுத்துச் செல்ல முடியும்,எனது மெய்யுடலை நீங்கள் கொண்டு செல்ல இயலாது" எனச் சூளுரைத்தவாறு தான் கற்ற யோக வித்தையினைப் பயன்படுத்தி அந்த மாட்டுவண்டியிலேயே "ஜீவசமாதி" அடைகிறார் பிரம்மபாந்தவன். நினைத்தவுடன் தனது உயிரைப் பிரித்துவிடுகின்ற இந்த அமரத்துவ நிலை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள் ஆங்கில அதிகாரிகள்.
என்ன நண்பர்களே!!!
"பாம்பின் கால் பாம்பறியும்" எனும் நிலைக்கேற்ப யோக வித்தை உணர்ந்த பாரதி, பிரம்மபாந்தவன் என்னும் இந்த சிவராஜயோகியின் பாதங்களுக்கு தான் அடிமை எனக்கூறியதில் வியப்பேதுமில்லையே!!!!!!!!!
இந்தப் புண்ணியநாளில் பிரம்மபாந்தவன் என்னும் அந்த யோகியின் பொற்பாதங்களை வணங்குவதை பெருமையாகக் கருதுகிறது யோகயுவகேந்திரா
ஜெய்ஹிந்த்!
No comments:
Post a Comment