பெண்ணில் எழுந்தது
ரமணன் என்னும் –
ரவி;
புன்மை இருள்
போயொழிந்து
புலர்ந்தது — இப்
புவி!
*****
தன்னைத்
தானே விரும்பாதவன்;
வீடுபெற வேண்டி
வீடு விட்டு வந்தபின் –
வீடு திரும்பாதவன்!
அவன்–
ஆரையும் விழுத்தவல்ல –
நசைகள் மூன்றும்
நண்ணா மலை;
அமர்ந்த இடம்
அண்ணாமலை!
அவன்
அரிய குணங்களின் –
அற்புத
ஆவணம்;
கோவணம் கட்டிய — திருமுறைப்
பாவணம்!
குகை புகுந்த — வாலறிவின்
சிகை;
அதனுள் சுரந்த
ஆனந்தச் சுனையில் — ஞான
அரவிந்தமாய் — மடல்
அவிழ்ந்த முகை!
மான்;
மயில்;
ஆன்;
அஜம்;
அனைத்திடமும்
அன்பு பாராட்டினான் — ஒரே
அளவதாய்; அவன் ஓர் –
ஆண் தாய்!
‘உன்னுள் இருக்கும்
உன்னை அறி;
நீயாகவே –
நிற்பான் அரி!’
உதவினான்
உபதேசம்;
உட்கார்ந்து கேட்டது
ஊர்; தேசம்!
‘நான்’ விட்டவன் — ஒருநாள்
வான் சென்றான்; செல்லுமுன்
‘நான்’ விட்டவன் — எவரும்
வான் செல்லலாம் என்றான்!
அன்னவனின் ஜெயந்திவிழாவில் பங்குபெற்று ஞான அருள்பெற அண்ணாமலைக்கு அழைக்கிறது.
யோகயுவகேந்திரா
1 comment:
Precious and valuable are your words in rhyming words and thought provoking about ramanar.
அவன்–
ஆரையும் விழுத்தவல்ல –
நசைகள் மூன்றும்
நண்ணா மலை;please explain this lines master.Sath guruve saranam.
Post a Comment