Total Pageviews

Saturday, January 28, 2012

கை வந்த கலை




























எங்கிருந்தோ ஒரு ஏலியன்





எங்கிருந்தோ ஒரு ஏலியன்



ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். "Lymphangioleiomyomatosis". சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான்.


டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. "...இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது வரைக்கும் சுமார் 500 கேஸ்களை அமெரிக்காலயும், ஐரோப்பாலயும் பதிவு செஞ்சுருக்காங்க. இப்ப சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இதைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்க. இந்தியால இது முதல் கேஸ் போல தான் தெரியுது..... ஆரம்பத்துல நுரையீரலைத் தாக்குகிற இந்த வியாதி பெரும்பாலும் பெண்களுக்குத் தான் வருதுங்கறாங்க. கிட்டத்தட்ட கேன்சர் செல்கள் மாதிரி இந்த வியாதி செல்களும் செயல்படுது.....பெரிய அளவுல உற்பத்தி ஆயிட்டே போய் மத்த செல்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனைக் கிடைக்க விடாமத் தடுத்துடுது.... முதல்ல நுரையீரலைத் தாக்கற இந்த நோய் போகப் போக மற்ற உடல் பாகங்களையும் தாக்க ஆரம்பிக்குது..... இது ரொம்பவே முத்துனதுக்கப்புறம் நமக்குத் தெரிஞ்சதால எதுவும் செய்யறதுக்கில்லை.....சாரி...."


ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்து விட்டு டாக்டர் சூசகமாக நாளை காலையிலேயே டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு போவது நல்லது என்று சொன்னார். அவனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையும் போய் மனதில் சூனியமே மிஞ்சியது. தலையை ஆட்டி விட்டு மௌனமாக வெளியே வந்தான். ஐ சி யூவிற்கு வெளியே இருந்த நாற்காலியில் ஒரு ஜடமாய் சிறிது நேரம் உட்கார்ந்தான்.


சென்ற மாதம் வரை அவன் வாழ்க்கை மிக ஆனந்தமாகவே போய்க் கொண்டிருந்தது. இளம் விஞ்ஞானியான அவனுக்கு அழகான மனைவி, படு புத்திசாலியான ஆறு வயது மகள், கை நிறைய பணம் என்று எல்லா வகைகளிலும் நிறைவாகவே வாழ்க்கை இருந்தது. ஆனால் திடீரென்று வைஷ்ணவி மூச்சுத் திணறலால் அவதிப்பட ஆரம்பித்த போது ஆஸ்துமாவாக இருக்கலாம் என்று தான் அவன் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டான். ஆனால் எந்த மருந்திலும் முன்னேற்றம் இல்லாமல் போகவே இந்த புகழ்பெற்ற ஆஸ்பத்திரியில் முழுமையாக பரிசோதனை செய்ய அழைத்து வந்தான். எல்லாப் பரிசோதனையும் முடிந்து தான் வாயில் நுழையாத பெயருடைய அந்த அபூர்வ வியாதி என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்....


போன் செய்து தன் வீட்டாருக்கும் அவள் வீட்டாருக்கும் தெரிவிப்பதற்கு முன்னால் அவனுக்கு யாருமில்லாத இடத்திற்குப் போய் தனியாக வாய் விட்டு அழத் தோன்றியது. கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி பத்தரை. எழுந்து வெளியே வந்து கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். மனம் மனைவியுடன் வாழ்ந்த இனிமையான நாட்களை நினைவுபடுத்திக் கொண்டு கனக்க ஆரம்பித்தது. அரை மணி நேரம் நடந்து ஒரு விளையாட்டு மைதானத்தை எட்டிய பின் அங்கு ஓரத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். நிலவொளியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. வாய் விட்டு அழ ஆரம்பித்தான்....


சில துக்கங்கள் அழுதும் குறைவதில்லை. பாட்டி வீட்டிற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றிருக்கும் மகளை எண்ணுகையில் துக்கம் மேலும் கூடியது. 'நான் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லையே. கடவுளே, ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?'


துக்கம் குறையா விட்டாலும் அழுகை ஓய்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் வைரங்களாய் வானத்தில் சிதறிக் கிடந்தன. மையிருட்டு வேளைகளில் மொட்டை மாடியில் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே அவனும் வைஷ்ணவியும் மணிக்கணக்கில் பேசுவார்கள். இரவு நேர ஆகாயம் மிக ரம்யமானது. கூர்ந்து பார்ப்பவர்களுக்கு ஆகாயம் எத்தனையோ அழகு ஜாலம் காட்டுவதுண்டு. எப்போதாவது அபூர்வமாய் ஒளிக்கற்றைகளும் தோன்றி மறைவதுண்டு. அதில் சிலதை UFO ஆக இருக்கலாம், அதில் ஏலியன்ஸ் பயணம் செய்து கொண்டிருக்கலாம் என்று கற்பனை வளமுடைய வைஷ்ணவி சொல்வதுண்டு. எந்த நேரத்தில் அப்படி பார்த்தோம் என்று அவள் அப்போதே கடிகாரத்தைப் பார்த்து பிறகு தவறாமல் டைரியில் குறித்துக் கொள்வாள். அவன் வாய் விட்டுச் சிரிப்பான். விஞ்ஞானியான அவன் ஆதாரபூர்வமாக இல்லாத எதையும் நம்புவதில்லை. பேசிப் பேசி அப்படியே அங்கேயே அவர்கள் உறங்கிப் போவதும் உண்டு.... இனி என்றும் அவன் தனியனே.


அடுத்த தவணையாக கண்ணீர் கண்களில் நிரம்புவதற்குள் ஆகாயத்தில் அபூர்வமான ஒரு ஒளிக் கற்றையை ஸ்ரீவத்ஸன் பார்த்தான். அது எப்போதையும் விடப் பிரகாசமாகவும் பெரியதாகவும் இருந்தது. வைஷ்ணவிஅவனுடன் இருந்திருந்தால் இதில் கண்டிப்பாக ஏலியன்ஸ் இருப்பதாக அடித்துச் சொல்லியிருப்பாள். அவனையும் அறியாமல் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று பத்து. வைஷ்ணவியின் பழக்கம் அவனிடமும் தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைத்தான். அந்த ஒளிக்கற்றை அவனை நோக்கி மின்னல் வேகத்தில் வர அவனையும் அறியாமல் ஸ்ரீவத்ஸன் தாவிக்குதித்தான்.


ஒளிக்கற்றை மறைந்து ஒரு மனிதன் அங்கே நின்றான். "சாரி நான் பயமுறுத்த நினைக்கவில்லை" என்று சொல்லி அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.


தோற்றத்தில் அவன் இளமையாகவும், உயரமாகவும் இருந்தான். மற்றபடி உருவத்தில் சாமானியனாகத் தெரிந்தான். ஸ்ரீவத்ஸன் முதலில் பார்த்தது அவன் கால்களைத் தான். கால்கள் நிலத்தில் பட்டன. அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போது வந்தவன் வாய் விட்டுச் சிரித்தான்.


"ஒரு விஞ்ஞானி பேய் இருக்கிறதாய் நம்பலாமா?"


ஒரு கணம் மறுக்க நினைத்த ஸ்ரீவத்ஸன் பின் மறுக்க முடியாமல் தானும் சிரித்தான். "லாஜிக், பகுத்தறிவு எல்லாம் வேலை செய்யறதுக்கு முன்னால் பயம் வேலை செய்துடுது".


தான் ஒரு விஞ்ஞானி என்பது இவனுக்கு எப்படித் தெரியும் என்கிற கேள்வி பிறகு தான் ஸ்ரீவத்ஸனைத் தாக்கியது. 'உண்மையில் இவன் யார்? அந்த ஒளியிலிருந்து தான் வந்தானா, இல்லை இதெல்லாம் என் பிரமையா? பேய் அல்ல என்றால் ஏலியனா? மனிதனுடைய தோற்றம் இருப்பதால் ஏலியனாக இருக்க முடியாதே. அதுவும் நம்முடைய மொழியை இவ்வளவு நன்றாகப் பேசுகிறானே'.


"நீங்க யாரு?"


"நான் பக்கத்துல இருந்து தான் வர்றேன்" என்று அவன் ஆகாயத்தைக் கை காட்டினான்.


வந்தவன் ஏதோ மேஜிக் கலைஞன் என்று ஸ்ரீவத்ஸன் முடிவு செய்தான். 'கொஞ்சம் சூட்சுமமாக கவனித்திருந்தால் அவன் எப்படி அந்த எ·பக்டைக் கொண்டு வந்தான் என்று கண்டுபிடித்திருக்கலாம்.'


"என்ன ஆகாயத்தைக் காண்பிக்கிறீங்க. விட்டா ஏலியன்னு சொல்லிக்குவீங்க போல இருக்கே"


அவன் புன்னகையோடு சொன்னான். "உம்... உங்க பாஷையில அப்படியும் சொல்லிக்கலாம்"


"ஆனால் மனுஷ ரூபத்தில் அல்லவா எழுந்தருளியிருக்கீங்க?"


"ஏலியன்ஸ்ன்னு நீங்க சினிமாக்களில் காண்பிக்கற மாதிரி வரணுமாக்கும். அதென்ன கற்பனையில் கூட கண், வாய் இதெல்லாம் இல்லாத ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடியாதா? மனிதன், விலங்கு ரெண்டையும் கூட்டி சில மாற்றங்கள் செய்து ஒரு உருவத்தைக் காண்பிக்கற அளவு தான் உங்க கற்பனை விரியுமா?" அவன் கிண்டலடித்தான்.


"நாங்க ஏலியன்ஸை மனுஷ ரூபத்திலிருந்து கொஞ்சமாவது வித்தியாசப்படுத்திக் காண்பிக்க முயற்சி செய்திருக்கோம். அவ்வளவு தான். ஆனால் ஏலியன்னு சொல்லிக்கிற நீங்க அச்சா எங்க மாதிரியே இருக்கீங்களே அது எப்படின்னு கேட்டேன்"


"வேற ரூபத்தில் வந்திருந்தா நீங்க என்னைப் பார்த்தவுடன் ஓடியிருப்பீங்க"


"நல்லா பேசறீங்க. உங்க சுய உருவம் என்னவோ?"


"நிலையான உருவம் இல்லை. உண்மையில் நாங்கள் சக்தி. தேவைப்படும் போது வடிவுகள் எடுப்போம். மீதி நேரங்களில் சக்தியாகவே வடிவமில்லாமல் இருப்போம். அணுவைப் பிளந்து பார்த்த உங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்ச பல சங்கதிகள் எங்களுக்கும் பொருந்தும்"


அணுவைப் பிளந்து பார்த்த போது பெரும்பாலும் வெட்டவெளியாக இருந்ததையும், அதனுள் இருந்த துகள்கள் சில சமயங்களில் அலைகளாக மாறிக் காணாமல் போவதையும், ஆனால் அணுவில் இருந்து பலவிதமான சக்தி வெளிப்பாடுகள் எப்போதும் இருந்ததையும் இன்றைய விஞ்ஞானம் சொல்வதைப் படித்து விட்டு வந்து இவன் தன்னைக் குழப்புகிறான் என்று ஸ்ரீவத்ஸன் நினைத்தான்.


"பூமிக்கு எதுக்கு வந்தீங்க?"


"பூமியில் சில ஆராய்ச்சிகள் செய்ய வந்திருக்கேன். ஜோடியா நீங்க ரெண்டு பேரும் ஆகாயத்தைப் பார்த்துட்டு பேசறதைப் பல தடவை கவனிச்சிருக்கேன். இப்ப தனியா அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்தப்ப பேசிகிட்டு போகலாம்னு தோணிச்சு."


ஸ்ரீவத்ஸனுக்கு தூக்கிவாரிப் போட்டது. 'ஜோடியாக ஆகாயத்தைப் பார்த்து பேசறது இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது. சிலரால் மனசுல நினைக்கிறதைப் படிக்க முடியும். இவனும் அப்படி ஏதோ வித்தை தெரிந்தவன் போல தெரியுது. அதனால தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான் நினைச்சு வருத்தப்பட்டுகிட்டு இருந்ததைப் படிச்சுட்டு சொல்றான்'


"அதுசரி எப்படி எங்க மொழியில் பேசறீங்க?"


"நான் எங்கே உங்க மொழியில் பேசறேன். நாம உண்மையில் நம்ம எண்ணங்களை வார்த்தைகள் இல்லாமல் பரிமாறிகிட்டிருக்கிறோம். Direct Thought Transference. அவ்வளவு தான்"


ஸ்ரீவத்ஸனுக்குக் கோபம் வந்தது. "தமாஷ் செய்யறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. சில மேஜிக் கத்துகிட்டு வந்துட்டு, சில குழப்பல் வார்த்தைகளைச் சொல்லிகிட்டு என் கிட்ட விளையாடாதீங்க. ப்ளீஸ். நான் ரசிக்கிற மூட்ல இல்லை. என் மனைவி மரணத்தை நெருங்கிகிட்டுருக்கா. தனியா வாய் விட்டு அழ இங்கே வந்திருக்கேன்....... அது சரி இத்தனை பேச்சு பேசறீங்களே உங்களுக்கு Lymphangioleiomyomatosis ன்னா என்னன்னு தெரியுமா?"


"பேர் வைக்கிறதுல தான் மனுஷங்க கெட்டிக்காரங்களாச்சே. என்ன அது வியாதி தானே"


அவன் யூகித்து தான் சொல்கிறான் என்பதில் ஸ்ரீவத்ஸனுக்கு சந்தேகமேயில்லை. "ஆமாம். என் மனைவிக்கு வந்திருக்கிற அபூர்வமான வியாதியின் பெயர். குணப்படுத்த முடியலை. காலம் கடந்து போயிடுச்சுன்னு டாக்டர் சொல்றார்"


"காலம்னு ஒண்ணு இருக்கிறதை உங்க ஐன்ஸ்டீனே சந்தேகப்பட்டு எழுதினார் தெரியுமா?"


மறுபடி அவன் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுகிறான் என்று தோன்ற சலிப்புடன் ஸ்ரீவத்ஸன் அவனைப் பார்த்தான்.


"அப்படிப் பார்க்க வேண்டாம். சிம்பிளா சொல்றேன். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் கனவு காண்கிற நேரம் ஒருசில நிமிஷங்கள் தான்னு உங்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா?. ஆனா அந்த ஒருசில நிமிஷங்கள்ல எத்தனையோ நாள் நடக்கிற மாதிரி நிகழ்ச்சிகளைக் கனவு காண முடியுது. கனவு கலைஞ்சா தானே அது கனவுன்னு தெரியுது. ஒரு வேளை கனவே கலையலைன்னா அத்தனை நாள் நிகழ்ச்சிகள் நடந்து முடிஞ்சதாத் தானே நினைக்கத் தோணும். ஆனா உங்க ஆராய்ச்சிப்படி அது ஒருசில நிமிஷங்கள் தான். கனவு கண்டுகிட்டு இருக்கிறவனோட நாள் கணக்கு சரியா, ஆராய்கிறவன் நிமிஷக் கணக்கு சரியா?"


ஸ்ரீவத்ஸனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்ன லாஜிக்கில் தவறில்லை என்று தோன்றியது. "சரி அதை விடுங்க. அந்த வியாதிக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கலையாம். சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இன்னும் ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்கலாம். உங்களுக்கு ஏதாவது மருந்து தெரியுமா?"


"ரொம்ப சிம்பிள். அந்த பிரச்சினைக்குரிய செல்களை அழிச்சிடணும். அவ்வளவு தான்"


"அது தான் எப்படி? உங்களால முடியுமா?"


"ஏன் முடியாம, என்னோட ஒரிஜினல் சக்தி அலைகளாய் மாறி உங்க மனைவி உடலுக்குள்ளே நுழைஞ்சு அதை சுலபமா செஞ்சுடலாம்"


இதுவரை விளையாட்டாகவே பேசிக் கொண்டு வந்த ஸ்ரீவத்ஸனுக்கு உண்மையில் இதை நம்ப முடியவில்லை என்றாலும் மனைவியைக் குணப்படுத்த முடியும் என்கிற கற்பனையே இனித்தது.


"சார், ஏதோ தமாஷாய் பேசிகிட்டு தேவையில்லாம என் மனசுல நம்பிக்கையை வரவழைச்சுடாதீங்க. நான் இப்ப தான் அழுது முடிஞ்சு யதார்த்த உண்மையை ஜீரணிக்க முயற்சி செய்துகிட்டிருக்கேன். நம்பி ஏமாந்து இன்னொரு தடவை உடைஞ்சு போக எனக்குத் திராணியில்லை"


"நான் தமாஷ் செய்யலை. இந்த சிகிச்சையில் நாங்க எப்பவோ முன்னேறி விட்டிருக்கிறோம். உங்க முன்னோர்களில் யோகிகள் கூட இந்த வித்தையைத் தெரிஞ்சு வச்சுகிட்டிருந்தாங்க. உங்க முனிவர்கள் அப்படி குணப்படுத்தினாங்க, ஜீசஸ் குணப்படுத்தினாருன்னு எல்லாம் படிக்கிறீங்களே அது எல்லாமே கற்பனைன்னு சொல்லிட முடியாது"


"சார் அப்படி மட்டும் நடந்துட்டா உலகத்துல என்னை விட அதிகமா யாராலும் சந்தோஷப்பட முடியாது. ஏன்னா... நான் அவளை அந்த அளவுக்கு நேசிக்கிறேன்". அவன் கண்கள் சொல்லச் சொல்ல நிறைந்தன. "ஆனா அதை வாய் விட்டு அவள் கிட்ட இது வரை நான் சொன்னது கூட இல்லை. இனிமே சொல்ல முடியுமான்னும் தெரியலை...." அதற்கு மேல் அவனுக்குப் பேச முடியவில்லை. அவன் உடைந்து போனான்.


"தாராளமா சொல்லலாம். சேர்ந்து ஆகாயத்தைப் பார்த்துட்டே பேசலாம். அப்படிப் பார்க்கிறப்ப கிடைக்கிற ஏதாவது நகர்கிற ஒளியில் நான் கூட இருக்கலாம்...குட்பை"


அடுத்த கணம் அவன் அங்கு இருக்கவில்லை. ஸ்ரீவத்ஸனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று பத்து. அந்த ஒளிக்கற்றையைப் பார்க்கும் போதும் இதே நேரம் தானே இருந்தது. கடிகாரம் நின்று விட்டதா என்று பார்த்தான். இல்லை, ஓடிக் கொண்டு தான் இருந்தது. இத்தனை நேரம் பேசியதற்கு நேரமே ஆகவில்லையா? எல்லாம் பிரமையா? நடக்காத ஒன்றைக் கற்பனை செய்து விட்டோமா? அவன் Thought Transference பற்றி சொன்னதும் கனவைப் பற்றிச் சொல்லி காலத்தை சந்தேகித்ததும் நினைவுக்கு வர ஸ்ரீவத்ஸனுக்கு தலை சுற்றியது.


மீண்டும் யதார்த்த உலகிற்கு வந்தவன் எழுந்து ஆஸ்பத்திரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் மனம் அந்தக் கற்பனை மனிதனுடன் நடந்த கற்பனைப் பேச்சுக்களையே சுற்றி வந்தன. ஐந்து நிமிடத்தில் அவன் செல் போன் அடித்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தான் அழைத்தார்கள். "சார் எங்கே இருக்கீங்க. சீக்கிரம் வாங்க".


எல்லாம் முடிந்து விட்டது போலிருக்கிறது. கடைசியில் அவளிடம் சொல்லாமல் விட்டது எத்தனையோ இருக்கிறது. அழுது கொண்டே ஓடி ஆஸ்பத்திரியை அடைந்தான்.


ஆஸ்பத்திரியில் ஐசியூவில் இருந்து டாக்டர் அவசரமாக வெளியே வந்து கொண்டிருந்தார். அவனைப் பார்த்தவுடன் பரபரப்புடன் சொன்னார். "என்னாலே நம்பவே முடியவில்லை. மெடிக்கல் ஹிஸ்ட்ரியில் இதை மிரகில்னு தான் சொல்லணும். உங்க மனைவி உடம்பில் அந்த நோயோட அறிகுறிகள் மாயமா மறைஞ்சு போயிடுச்சு....எழுந்து உட்கார்ந்து உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க. நான் தான் கொஞ்ச நேரம் அப்சர்வேஷன்ல வச்சுருக்கச் சொல்லி இருக்கேன்.... எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"


நர்ஸ் ஒருத்தி டாக்டரிடம் ஓடி வந்தாள். "டாக்டர் சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இருந்து உங்களுக்கு போன்"


"பேஷண்டுக்கு நாம கடைசியா குடுத்த மருந்து லிஸ்ட்டை அவங்க கேட்டுருக்காங்க. அதுல ஏதோ ஒரு காம்பினேஷன் மிரகுலஸா வேலை செய்திருக்குன்னு அவங்க நம்பறாங்க......" டாக்டர் சொல்லிக் கொண்டே வேகமாக தனதறைக்குப் போனார்.


ஸ்ரீவத்ஸனுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவல்ல நிஜம் தான். கண்களில் அருவியாய் நீர் வடிய வெளியே ஓடினான். ஆகாயத்தைப் பார்த்து அழுது கொண்டே"தேங்க்ஸ்" சொன்னவனை ஆஸ்பத்திரி வாட்ச்மேன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.










நன்றி; வல்லமை


Thursday, January 26, 2012

மீண்டும் ஒரு தேடல் 11

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்


“இந்த அற்புதங்களை எப்படிச் செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?”


இந்தக் கேள்விக்கு உண்மையான விளக்கத்தைச் சொல்ல முன் வருபவர்கள் வெகு சிலரே. விளக்கி விட்டால் தங்களைக் குறித்து அடுத்தவர்கள் வைத்திருக்கும் அதீத மதிப்புக் குறைந்து விடும் என்று நினைப்பது இயல்பே. ஆனால் டெஹ்ரா பே அப்படி நினைக்காமல் பால் ப்ரண்டனிடம் விளக்க முன் வந்தார்.


”எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நமக்குள்ளே இருக்கும் பிரம்மாண்டமான சக்தியை நாம் கண்டு கொள்வதே. அதைக் கண்டு கொள்ளும் வரை அறியாமை என்ற சங்கிலியால் கட்டுண்டே இருக்க நேரிடும். கண்டு கொண்டால் மட்டுமே ஆழ்மன சக்திகளையும், மற்ற பெரிய சக்திகளையும் பயன்படுத்த முடியும். நான் செய்து காட்டியவற்றை சிலர் கண்கட்டு வித்தை என்று நினைக்கலாம், அல்லது அமானுஷ்ய சக்தியைப் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளும் சரியல்ல. நான் செய்த அனைத்துமே இயற்கை விதிகளுக்கு உட்பட்டதே. அறிவியல் உண்மையைச் சார்ந்ததே.”


“மற்றவர்களுக்கு அற்புதமாகத் தோன்றும் இந்தச் செயல்களை நான் செய்ய இரண்டு விஷயங்கள் உதவுகின்றன. ஒன்று, உடலின் சில நாடி நரம்பு மையங்களைப் பற்றி அறிந்து அவற்றில் அழுத்தம் தருவது. இரண்டாவது நாக்கை உள்ளிழுத்துக் கொண்டு உணர்வற்று ஆழ்மயக்க நிலைக்கு என்னால் போக முடிவது. இந்த இரண்டையும் செய்யத் தவறினால் என்னாலும் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் ஆன்மிகம் எதுவும் கிடையாது. ஆன்மிகம் என்று நான் ஏதாவது சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் செய்யும் போது பற்றுதல் இல்லாத நிலையில் நான் இருப்பதை வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். மற்றபடி இதில் ஆன்மிகமோ, மந்திரவாதமோ கிடையாது.”


பால் ப்ரண்டனுக்கு அவர் வெளிப்படையாக ஒத்துக் கொண்டு விளக்கிய விதம் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. அவர் கேட்டார். “அந்த இரண்டு அம்சங்களையும் விளக்கிச் சொல்ல முடியுமா?”


டெஹ்ரா பே சொன்னார். “நரம்புகள் மூலமாகவே வலி மூளைக்கு உணர்த்தப்படுகிறது. அவற்றின் சில சூட்சும மையங்களை அறிந்து விரல் அழுத்தத்தினால் அந்த மூளைக்கு இரத்த ஓட்டம் செல்ல தடை செய்தால் அந்த நரம்பு மையங்கள் அனஸ்தீஷியா (மயக்க மருந்து) கொடுத்தது போல உணர்விழந்து போகும். வலி தெரியாது. ஆனால் இதைக் கடும் பயிற்சி மூலம் தான் கற்றுத் தேற முடியும். அப்படியில்லாமல் அரைகுறையாகத் தெரிந்து கொண்டு இதை யாராவது முயற்சித்தால் உயிருக்கு ஆபத்தாகவே முடியும். இதைச் செய்யும் போது மன ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் இறுக்கமற்ற முறையில் தசைகளையும் நரம்புகளையும் வைத்திருக்க வேண்டும். நாக்கை உள்ளிழுத்து ஆழ்மயக்க நிலைக்குப் போவதற்கும் முறையான பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். இதில் இந்திய யோகிகள் கைதேர்ந்தவர்கள்.”


பால் ப்ரண்டன் சுவரசியத்துடன் கேட்டார். “ஆழ்மயக்க நிலைக்குச் சென்ற பிறகு என்ன ஆகிறது?”


”ஆழ்மயக்க நிலைக்குச் செல்லும் முன்பே எந்த நேரத்தில் திரும்ப சுயநினைவுக்கு வரவேண்டும் என்பதனை ஆழ்மனதில் முன்பே குறித்துக் கொண்டு விட வேண்டும். குறித்த காலத்தில் ஆழ்மனம் தானாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து விடும். மேல்மனம் உறங்கி விட்டாலும் ஆழ்மனம் எப்போதும் உறங்குவதில்லை. இது பெரிய விஷயமல்ல. மறு நாள் இத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று முடிவு செய்து அப்படியே அலாரம் இல்லாமல் விழித்தெழுவது பலருக்கும் முடிகிறது. அதே போல் தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பவர்கள் அந்த உறக்க நிலையிலும் எத்தனையோ வேலைகளைத் தங்களை அறியாமலேயே செய்வதையும் நாம் சர்வசகஜமாகப் பார்க்கிறோம். நரம்பு மையங்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்மயக்க நிலைக்குச் சென்றவுடன் உடலில் இரத்த ஓட்டம் நின்று விடுகிறது. சுருக்கமாக உடலின் எல்லா இயக்கமும் ஸ்தம்பித்து நின்று விடுகிறது.”


“பல முறை குத்திய பிறகும் உங்கள் உடலில் காயமோ, காயத்தின் தழும்போ இல்லாமல் இருந்தது எப்படி?”


”அதை நான் இரு விதங்களில் சாதிக்கிறேன். முதலில் என் இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக அதிகரிக்க வைக்கிறேன். அதனால் இதயத்துடிப்பு அதிகமாகிறது என்றாலும் அது தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். இரத்த ஓட்டம் அத்தனை வேகமாகச் செல்வதால் காயங்கள் என் மன உறுதியின் தன்மையிலேயே குணமாகி விடுகின்றன. அடுத்ததாக இரத்தத்தின் சூட்டை நான் அதிகமாக்குகிறேன். அந்த சூட்டில் ஏதாவது கிருமிகள் காயங்களில் நுழைந்திருந்தாலும் அவை உடனடியாக அழிந்தும் போகின்றன. இந்த இரண்டையும் செய்வதால் சாதாரண காயங்கள் உடனடியாகவும், ஆழமான காயங்கள் சில மணிகளுக்குள்ளும் ஆறி விடுகின்றன”


டெஹ்ரா பே எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக விளக்கிய விதம் பால் ப்ரண்டனை வியப்பில் ஆழ்த்தியது. அவர் அடுத்தபடியாக அவரை மிகவும் பிரமிக்க வைத்த முக்கிய நிகழ்ச்சி பற்றி கேட்டார். “உயிரோடு புதைந்து பல மணிகள் கழித்தும், பல நாட்கள் கழித்தும் பின் பிழைத்தது எப்படி?”


( தேடல் தொடரும்)

Monday, January 23, 2012


மீண்டும் ஒரு தேடல் 10



மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்



அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் தன் சக்திகளை வெளிக்காட்ட டெஹ்ரா பே சம்மதித்தவுடன் பால் ப்ரண்டன் சில மருத்துவர்களையும், சில அறிஞர்களையும் அழைத்துப் பேசி அவர்கள் கண்காணிப்பில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.




அந்த நிகழ்ச்சிக்கு டெஹ்ரா பே அரபு உடையில் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அறையில் ஒரு மேசையில் அவர் பயன்படுத்த இருக்கும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. கூர்மையான வாள்கள், கத்திகள், அரிவாள்கள், நீண்ட ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மேசையில் நீண்ட கூர்மையான ஆணிகள், சுத்தியல், ஒரு பெரிய கனமான பாறைக்கல், எடை பார்க்கும் கருவி ஆகியவை இருந்தன. ஒரு கூடையில் ஒரு வெள்ளைக் கோழியும், சாம்பல் நிற முயலும் இருந்தன. பெரிய சவப்பட்டி, அதை விடப் பெரிய இன்னொரு பெட்டி ஆகியவையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.



முதலில் மருத்துவர்களும், கண்காணிக்க வந்த மற்ற அறிஞர்களும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்த்தனர். எல்லாம் உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின் அவர்கள் முன்னிலையில் தன் சாகசங்களைச் செய்து காட்ட டெஹ்ரா பே ஆரம்பித்தார்.



முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தினார். இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தியபடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் ஒருவித மயக்க நிலைக்குப் போய் விட்டார். அவர் கண்கள் மூடின. ஒரு அமானுஷ்யமான சத்தம் அவருள்ளில் இருந்து எழுந்தது. உடல் மரக்கட்டை போல ஆகியது. அப்படியே சாய்ந்த அவரை அவருடைய உதவியாளர்கள் மட்டும் பிடித்திருக்கவில்லை என்றால் கீழே விழுந்திருப்பார்.



ஒரு உதவியாளர் நீண்ட வாள்கள் இரண்டை எடுத்து ஒரு நீளமேசையில் கூர்மையான பகுதிகள் மேலிருக்கும்படி பதித்து வைத்தார். பின் டெஹ்ரா பே அவர்களின் இடுப்பு வரை உள்ள உடைகளைக் களைந்து அப்படியே அந்த வாள்கள் மீது உதவியாளர்கள் இருவரும் மல்லாக்க படுக்க வைத்தனர். ஒரு வாள் அவருடைய தோள்பட்டைகளுக்கு அடியிலும், இன்னொரு வாள் அவருடைய முட்டிகளுக்கு அடியிலும் இருக்கும்படி படுக்க வைத்திருந்தனர். மருத்துவர்கள் அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்தனர். நாடித்துடிப்பு அதிகமாய் (130) இருந்தது.



அங்கு வைத்திருந்த பாறையை எடுத்து அங்கிருந்த எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தனர். 90 கிலோகிராம் எடை இருந்தது. அதை இருவரும் தூக்கி டெஹ்ரா பேயின் வயிற்றின் மீது வைத்தனர். அவருடைய உதவியாளர்களில் ஒருவன் பெரிய சுத்தியலை எடுத்து அந்தப் பாறையை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். டெஹ்ரா பேயின் உடலோ இரும்பாய் இறுகி இருந்தது. அவர் உடலில் எந்தப் பெரிய பாதிப்பும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தப் பாறை இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்தது.



டெஹ்ரா பே அவர்களை அவர்கள் எழுப்பி உட்கார வைத்தனர். மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதித்த போது அவர் வயிற்றில் பாறை இருந்து அழுத்திய அறிகுறிகள் தெரிந்தாலும் அவர் முதுகுத் தோலில் எங்குமே வாள் அழுத்திய காயம் தென்படவில்லை. எந்த வலியாலும் அவர் அவஸ்தைப்பட்டது போலவும் தெரியவில்லை. ஏதோ மலர்ப்படுக்கையில் படுத்து எழுந்தது போல் இருந்த டெஹ்ரா பேயை மருத்துவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தக் காட்சி பால் ப்ரண்டனுக்கு இந்தியாவில் காசியில் கண்ட சில பரதேசிகளை நினைவுறுத்தியது. கூர்மையான ஆணிகளில் அமர்ந்தும் படுத்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்த அந்த பரதேசிகளை யோகிகளாய் அவரால் நினைக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த சமயத்தில் அவரை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.






அடுத்ததாக ஒரு மரப்பலகை முழுவதும் ஆணிகளின் கூரிய முனைகள் மேற்பக்கம் நீட்டிக் கொண்டிருக்க அந்த ஆணிகள் மேல் டெஹ்ரா பேயைப் படுக்க வைத்தார்கள். உதவியாளர்களில் ஒருவன் தாவிக் குதித்து ஆணிகள் மீது படுத்திருந்த அவர் மீது நின்றான். ஒரு கால் அவர் நெஞ்சிலும், ஒரு கால் அவர் வயிற்றிலும் இருந்தன. பார்வையாளர்கள் ஒரு கணம் காணக் கூசி கண்களை மூடினார்கள். ஆனால் அந்த உதவியாளன் கீழே இறங்கிய பின் அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் முதுகில் ஆணிகள் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வியப்புடன் கவனித்தனர்.





மயக்க நிலையிலிருந்து மீண்ட டெஹ்ரா பே சில நிமிட ஓய்வுக்குப் பின் தன் உடல், வலிக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்க வேறு சில சோதனைகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். மருத்துவர்களைப் பெரிய ஊசிகள் எடுத்து தன் கன்னங்களில் குத்தச் சொன்னார். இரு கன்னங்களில் குத்திய ஊசிகள் வாய் வழியே வந்த போதும் அவர் சிறிது கூட முகம் மாறவில்லை. முகத்தில் சில இடங்கள் இது போன்ற ஊடுருவலில் காயம் அடைவதில்லை என்பதை உணர்ந்திருந்த மருத்துவர்களை டெஹ்ரா பே எங்கு வேண்டுமானாலும் குத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தார்.



அவருடைய தாடையில் பெரிய ஊசிகளைக் குத்தினார்கள். முழு விழிப்பு நிலையில் இருந்த போதும் டெஹ்ரா பே எந்த வலியும் இல்லாமல் இருந்தார். மருத்துவர்களில் ஒருவர் ஒரு பெரிய கத்தியை அவர் கழுத்தின் முன் பகுதியில் ஒரு அங்குல தூரம் உள்ளே செலுத்திய போதும் அவர் சாதாரணமாக அமர்ந்திருந்தது அனைவரையும் திகைப்படைய வைத்தது. தொடர்ந்து முகத்திலும் மார்பிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் கீறிய போதும் அவர் காயமடையாதது மட்டுமல்ல ஒரு துளி இரத்தம் கூட அவர் உடலில் இருந்து சிந்தவில்லை. அவர் ஏதாவது மருந்து உட்கொண்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளிலும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை.



ஒரு மருத்துவர் இரத்தம் வருவதைக் காண வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த டெஹ்ரா பே அடுத்ததாக அவர் மார்பில் கத்தியால் குத்திய போது இரத்தம் வரவழைத்தார். இரத்தம் அவர் மார்பை நிறைத்த வரை பார்த்த அந்த மருத்துவர் போதும் என்று சொன்ன போது உடனடியாக இரத்தம் வெளி வருவதை தன் சக்தியால் டெஹ்ரா பே நிறுத்தினார். அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த மார்புக் காயம் இருந்த இடம் தெரியாமல் போகுமாறு குணப்படுத்தியும் காட்டிய போது அனைவரும் பிரமித்துப் போயினர். எரியும் கொள்ளியால் அவருடைய கால்களில் பாதம் முதல் தொடை வரை சூடுபோட்டனர். அதிலும் மனிதர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சுமார் 25 நிமிடங்கள் அப்படி தன் முழு கட்டுப்பாட்டில் உடலை வைத்திருந்த அவர் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் சொன்னார். “நான் முன்கூட்டியே தயார் நிலையில் இல்லாத நேரத்தில் எதிர்பாராதவிதமாய் என்னை கத்தியால் சிறிது கீறினாலும் வலி தாங்காமல் கத்தி விடுவேன்”



அடுத்ததாக அவர் கோழி முயல் இரண்டையும் தனித்தனியாக முற்றிலும் நகர சக்தியற்றதாக்கிக் காட்டினார். உயிர் உள்ளது என்பதற்கு அறிகுறியாக அவற்றின் கண்கள் அசைந்தனவே தவிர மேசையின் மீது இருந்த அவற்றால் வேறெந்த விதத்திலும் நகர முடியவில்லை. பின் சிறிது நேரம் கழித்து அவர் லேசாகத் தட்டிக் கொடுத்த பின்னர் தான் அவை அங்குமிங்கும் ஆனந்தமாக ஓடின.



பின் டெஹ்ரா பே உயிருடன் சமாதி ஆகிக் காட்டும் பரிசோதனையில் தன்னை உட்படுத்திக் கொண்டார். சமாதியான பின் முன்கூட்டியே தெரிவித்த நேரத்தில் மீண்டும் உயிர்பெற்றுக் காட்டுவதாகச் சொன்னார். 28 நாட்கள் மண்ணில் புதைந்ததாக அவர் சொல்லி இருந்தாலும் நேரில் பார்த்தவர் பால் ப்ரண்டன் திரட்டிய குழுவில் யாரும் இல்லை என்பதால் அவர்கள் நேரில் காண ஆவலாக இருந்தனர். ஒன்றரை மணி நேரம் அந்த இடத்தில் சமாதியாகி விடுவதாகவும், பின் ஐந்து நிமிடத்தில் உயிருடன் திரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.



முன்பு மயக்க நிலைக்குச் சென்றது போல முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தி, இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தி, பின் நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் உயிரற்ற பிணம் போல சாய அவருடைய உதவியாளர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவர் மூச்சு நின்றது. இரத்த ஓட்டமும் நின்றது. இதை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின் அவர் மூக்கிலும், காதுகளிலும் பஞ்சை அடைத்து ஒரு சவப்பெட்டியில் கிடத்தினார்கள். சவப்பெட்டி உண்மையானது தானா இல்லை ஏதாவது ரகசியக் கதவு இருக்கிறதா என்பதையும் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்தனர். அவரை அதில் கிடத்திய பின் அந்த சவப்பெட்டியை சிவப்பு மணலால் நிரப்பி சவப்பெட்டியை ஆணி அடித்து மூடினார்கள். இன்னொரு பெரிய பெட்டியில் சவப்பெட்டியை வைத்து அதையும் மண்ணால் நிரப்பி மூடினார்கள். இது நடைபெற்ற இடம் கெய்ரோவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் மாடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் என்பதால் இரகசிய சுரங்கப்பாதை தரையில் இருக்க வழியில்லை என்றாலும் அதையும் ஒரு முறை பரிசோதித்து அங்குள்ள அறிஞர்கள் திருப்தி அடைந்தார்கள்.



ஒன்றரை மணி நேரம் அனைவர் பார்வையும் அந்த தற்காலிக சமாதிப் பெட்டியில் தான் இருந்தது. ஒன்றரை மணி நேரம் கழிந்த பின் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டது. உள்ளிருந்த சவப்பெட்டி எடுக்கப்பட்டு ஆணிகளைக் களைந்து அதையும் திறந்தனர். பின் அவரை எடுத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். அவர் முன்பே கூறியபடி சில நிமிடங்களில் அவர் கண்கள் அசைந்தன, மூச்சு விடவும் ஆரம்பித்தார்.



தனது ஆழ்ந்த சமாதி உறக்கம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருந்தது என்றும், உடல் முன்பே தன்னால் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில் மறுபடி இயங்க ஆரம்பித்தது என்றும் கூறினார். பால் ப்ரண்டனும், அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களும், பார்வையாளர்களும் மனிதன் நினைத்தால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஓருசில உதாரணங்களிலேயே உணர்ந்த சிலிர்ப்பில் இருந்தனர்.



பின்னர் ஒரு நாள் அவரை பால் ப்ரண்டன் சந்தித்த போது "மனித சக்தி எல்லையற்றது என்பதை இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல காலமாக அறிந்திருகிறேன் அதில் கற்பனைக்கும் எட்டாத அளவு இந்தியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் , இதையெல்லாம் வைத்துப் பணமாக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை" என்றும், தான் விரும்பா விட்டாலும் இதை ஒரு வியாபாரம் போல செய்வதற்கு தான் வருத்தப்படுவதாகவும் டெஹ்ரா பே தெரிவித்தார். ”உண்மையில் இது ஒரு விஞ்ஞானம். இதில் நான் பெரிய விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன். ஆனால் உலகம் என்னை வியாபாரியாக்கி விட்டது.”என வருத்தப் பட்டார்



ஆனாலும் பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே அவர்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. இது போன்ற சித்திகள் பெற்ற ஒருசிலர் தங்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கையில் இது எல்லாம் மனிதனால் முடிந்தவையே, தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் ஒருவர் பெற்று விட முடியும் என்று சொல்ல முடிந்த அடக்கம் எத்தனை பேருக்கு வரும் என்ற வியப்பு அவர் மனதில் ஏற்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அவரைக் கேட்டார். “இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?”





(தேடல் தொடரும்)

Saturday, January 21, 2012

மீண்டும் ஒரு தேடல் 9



28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்

அந்த அவதூதரின் பெயர் டெஹ்ரா பே.

ருமேனியா, இத்தாலி போன்ற நாடுகளின் அரசர்களும், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளும் பல முறை தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துப் பேசிய பெருமையுடைவர் அந்த அவதூதர். பலருடைய விமர்சனங்களுக்கு ஆளான போதும் தன் அபூர்வ சக்திகளின் வெளிப்பாடுகளை ஆராய விரும்பியவர்களைத் தட்டிக் கழிக்காதவர் அவர். இந்தியாவில் பல யோகிகளின் சக்திகளையும் ஆப்பிரிக்காவில் சில மனிதர்களின் சக்தியையும் நேரடியாகக் கண்டிருந்த பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே செய்து காட்டியதாகக் கேள்விப்பட்ட தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை. முறையாக யோக சக்திகளைப் பயின்றவர்களுக்கு முடியாதது தான் என்ன?

பால் ப்ரண்டன் நேரில் சென்று பார்த்த அந்த அவதூதர்  வித்தியாசமானவராகத் தெரிந்தார். தாடியுடன் இருந்த அவர் சராசரிக்கும் குறைவான உயரமானவராகவே இருந்தார். சில சமயம் அரபுகளின் பாரம்பரியமான உடை மற்றும் தலைக் கவசம் அணியும் அந்த அவதூதர் , சில சமயம் ஐரோப்பியர்களின் உடை மற்றும் தொப்பியுடன் காணப்பட்டார். விடாமல் சிகரெட் பிடிப்பவராகவும் இருந்தார். ஒரு மனிதரை முழுமையாக அறிய அவர்வாழ்க்கையை ஆராய்ந்தால் போதும் என்று நினைத்த பால் ப்ரண்டன் கூர்மையான பார்வை, அமைதியான தன்மை கொண்டிருந்த அந்த அவதூதரிடம், அவரைப் பற்றிச் சொல்லும்படி கேட்க,......

“நான் 1897ல் நைல் நதிக்கரையோரம் இருந்த டேண்டா என்ற சிறிய நகரத்தில் பிறந்தேன். என்னைப் பிரசவித்த உடனேயே என் தாய் இறந்து விட்டாள். என் தந்தையும் சக்தி வாய்ந்த அவதூதர்களிடம் தொடர்பு கொண்டிருந்ததால் இளமையிலேயே நான் இந்த அற்புத சக்திகளுக்கு இணக்கமான சூழ்நிலையிலேயே வளர்ந்தேன். என் தந்தையும் சில அவதூதர்களும் தான் என் ஆசிரியர்களாக இருந்தார்கள். நான் தேவையான பயிற்சிகளையும், ஞானத்தையும் அவர்களிடம் இருந்து பெற்றேன். அப்போது உள்நாட்டு அமைதியில்லாத சூழ்நிலை காரணமாக நான், என் தந்தை, ஒரு ஆசிரியர் மூவருமாக துருக்கிக்கு சென்று கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்தில் வசித்தோம்.”

“அங்கு நான் நவீன கல்வி கற்றேன். மருத்துவம் படித்து டாக்டரானேன். அந்தக் கல்வி எனக்கு மிக உபயோகமாக இருந்தது. என்னுடைய அபூர்வ சக்திகளை நானே விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ள எனக்கு மருத்துவக் கல்வி பெரும் உதவியாக இருந்தது. நான் கிரீசில் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து என் சுய ஆராய்ச்சிகளை அங்கே தொடர்ந்தேன்”

“மிகக் குறுகிய காலத்தில் அங்கு நான் செய்து காட்ட முடிந்த அற்புதம் நான் பெற்ற சக்திக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டாக இருந்தது. 28 நாட்கள் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கத் தீர்மானித்த போது அங்குள்ள பாதிரியார்கள் கடுமையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசாங்கத்திடம் சொல்லி தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுவது போல் நான் செய்து காட்ட நினைப்பது என்று எண்ணினார்கள் போல இருந்தது. ஆனால் அரசாங்கம் டாக்டரான எனக்கு செய்யப் போவதன் அபாயத் தன்மையை விளக்க வேண்டியதில்லை என்று சொல்லி என்னைத் தடுத்து நிறுத்த முற்படவில்லை. நான் டாக்டராக இருந்தது அங்கு மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும், நான் இது போன்ற நிகழ்வுகளைச் செய்து காட்ட உதவியது. நான் 28 நாட்கள் மண்ணில் புதைந்து கிடந்து பின் வெற்றிகரமாக வெளியே வந்தேன்.”

“நான் பல்கேரியா, செர்பியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று சில நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினேன். இத்தாலியில் பல விஞ்ஞானிகள் முன்னிலையில் அவர்கள் பரிசோதனை செய்யவும் சம்மதித்து ஒரு நிகழ்ச்சியை செய்து காட்டினேன். காரீயத்தால் ஆன சவப்பட்டியில் படுத்துக் கொண்டு என் உடல் எல்லாம் மண்ணால் மூடி, அந்த சவப்பெட்டியை ஆணிகளால் அடித்து மூடி ஒரு நீச்சல் குளத்தின் அடியில் அந்த சவப்பெட்டியை இறக்கினார்கள். ஆனால் அரை மணி நேரத்தில் போலீசார் வந்து அந்த நிகழ்ச்சியைத் தடை செய்து என்ன வெளியே எடுத்து விட்டார்கள். ஆனால் அரை மணி நேரம் நான் அந்த சவப்பெட்டியில் பாதிக்கப்படாமல் இருந்தேன்”

“பின் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அதே நிகழ்ச்சியைத் தொடரத் தீர்மானித்தேன். அங்குள்ள போலீசாரிடம் முன்பே நான் டாக்டர் என்ற ஆதாரத்தைக் காண்பித்து அனுமதி பெற்றேன். அவர்கள் அனுமதி தந்ததோடு நான் பொது மக்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக தண்ணீருக்குள் இருந்த என் சவப்பெட்டியை 24 மணி நேரமும் வெளியே இருந்து காவல் காத்தார்கள். 24 மணி நேரம் கழித்து அவர்கள் சவப்பெட்டியைத் திறந்த போது நான் உயிருடன் வெளியே வந்தேன்” என்ற டெஹ்ரா பே,... அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் பால் ப்ரண்டனிடம் காட்டினார்.

டெஹ்ரா பே தொடர்ந்தார். “நீங்கள் இந்தியாவிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளதாக உங்கள் நூலில் தெரிவித்து இருந்தீர்கள். ஆனால் பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகளில் ஏமாற்று வேலை நடைபெறுவதாகப் பலரும் குற்றம் சாட்டினார்கள். சில போலி யோகிகளும், பக்கிரிகளும் மண்ணில் புதைக்கப்படும் போது மூச்சு விட உதவுகிற ரகசிய சுரங்கப் பாதைகளை உருவாக்கி ஏமாற்றுகிறார்கள் என்ற விமரிசனம் பல இடங்களில் வருவதை நான் கேள்விப்பட்டுள்ளேன். பிரான்சில் நடந்த அந்த நிகழ்ச்சியில் தண்ணீருக்குள் அப்படி எந்த ரகசியப் பாதையை உருவாக்க வாய்ப்பே இல்லை என்பதாலும் போலீஸ் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணித்திருந்தனர் என்பதாலும் பல விமரிசகர்களும், சந்தேகத்தோடு ஆரம்பத்தில் என்னைப் பார்த்தவர்களும் என்னை முழுமையாக நம்பியதோடு பாராட்டவும் செய்தார்கள்”

"இந்த நிகழ்ச்சி பத்திரிகைகளில் வெளி வந்த ஸ்பெயின் நாட்டின் அரசி எனக்கு அவர்கள் நாட்டிற்கு வர அழைப்பு விடுத்தார். நான் இதையெல்லாம் பெருமைக்குச் சொல்லவில்லை. உண்மையான சித்தர்களும், யோகிகளும், பக்கிரிகளும் இது போன்ற வெளிப்பகட்டுகளில் ஆர்வம் கொள்வதில்லை. விருப்பு வெறுப்பில்லாமல் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்வது தான் அவர்கள் குறிக்கோள். ஐரோப்பிய சொகுசு வாழ்க்கையில் நான் வாழ்ந்தாலும் உள்ளூர இந்த உண்மையை நான் உணர்ந்தே இருந்தேன். மேலும் பல பக்கிரிகள் மற்றவர்களின் பரிசோதனைகளுக்கு உட்பட மறுக்கிறார்கள். தங்கள் இடத்தை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல மறுக்கிறார்கள். அவர்கள் மேலை நாடுகளின் கல்வியையும் ஏற்றுக் கொள்வதில்லை. நான் இந்த நிலையில் இருந்து மாறுபட நினைத்தே இந்த மேற்படிப்புகளைப் படித்து, இந்த அதீத சக்திகளையும் வெளிப்படுத்தி பலர் என்னைப் பரிசோதனை செய்ய சம்மதித்தேன். நான் செய்து காட்டியதெல்லாம் இயற்கையின் விதிக்கு உட்பட்டவையே. அதில் எனக்கு ஆழ்ந்த ஞானம் இருந்ததால் எனக்குப் பயமும் சந்தேகமும் இருக்கவில்லை. முக்கியமாக பல டாக்டர்கள் நான் செய்து காட்டிய நிகழ்ச்சிகளில் பின் அதிக ஆர்வம் காட்டினார்கள்”

அந்தப் பக்கிரி சொன்னதை எல்லாம் பால் ப்ரண்டன் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். அதீத சக்திகளை இந்தியாவில் பார்த்தும் கேள்விப்பட்டும் இருந்த பால் ப்ரண்டனுக்கு இது போன்ற அதீத சக்திகள் எல்லாம் நடக்க முடியாத அதிசயங்கள் அல்ல என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மேலை நாடுகளின் படிப்புடன் சித்தர்களின் சக்தியையும் பெற்றிருந்த ஒரு மனிதரை பால் ப்ரண்டன் சந்திப்பது அது தான் முதல் முறை. அது தான் அவருக்கு பெரும் சுவாரசியத்தை அந்த மனிதர் மேல் ஏற்படுத்தி இருந்தது.

பால் ப்ரண்டன் டெஹ்ரா பேயிடம் கேட்டார். “நானும் இந்த சக்திகளில் ஆர்வம் காட்டும் அறிஞர்களையும் டாக்டர்களையும் அழைத்து வருகிறேன். எங்கள் முன் நீங்கள் உங்கள் சக்திகளை வெளிப்படுத்திக் காட்டுவீர்களா?”

ஆர்வத்துடன் கேட்ட பால் ப்ரண்டனிடம் டெஹ்ரா பே சம்மதித்தார்.

(தேடல் தொடரும்)

Thursday, January 19, 2012

மீண்டும் ஒரு தேடல் 8



ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும் முடியாததும் ...









ஹிப்னாடிசம் செய்யப்பட்ட மார்கரைட்டின் சக்திகள் அத்துடன் முடிந்து விடவில்லை. பால் ப்ரண்டனுடன் வந்திருந்த பெண்மணியிடம் மார்கரைட்டின் கையைப் பிடித்துக் கொள்ள எட்வர்டு அடெஸ் சொல்ல அவரும் அப்படியே செய்தார்.

எட்வர்டு அடெஸ் சொன்னார். “யாரையாவது நினைத்துக் கொள்ளுங்கள். அவர் உருவத்தை உங்கள் மனதில் கொண்டு வாருங்கள்”

அந்தப் பெண்மணி தன் கணவரின் உருவத்தை மனதில் நினைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் மார்கரைட் அந்தப் பெண்மணியின் கணவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய உருவம், குணங்கள், திறமைகள் பற்றியெல்லாம் விவரித்தார். அந்த மனிதர் ஒரு அரசாங்க அதிகாரி என்பதையும் சொன்னார். (அந்தப் பெண்மணியைக் கூட்டி வந்த போது அவர் என் நண்பர் என்று சொன்னாரே ஒழிய வேறு விவரங்கள் சொல்லி இருக்கவில்லை).

(ஆனால் மார்கரைட் இன்னொரு சந்தர்ப்பத்தில் பால் ப்ரண்டனுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்ல முற்பட்ட போது அவை முற்றிலும் தவறாக இருந்ததாக பால் ப்ரண்டன் கூறுகிறார். ஆனால் பால் ப்ரண்டனுடைய எண்ணங்கள், ஆசைகள், இலட்சியங்கள் பற்றி எல்லாம் கூற முற்பட்ட போது அவை மிகச் சரியாகவே இருந்தன. இது போன்ற ஹிப்னாடிச நிலைக்குக் கூட எதிர்காலம் புரியாத புதிராகவே இருக்கிறது என்று பால் ப்ரண்டன் நினைத்துக் கொண்டார்.

இந்த இடத்தில் ஒரு உண்மையை அறிந்து கொள்வது மிக முக்கியம். ஹிப்னாடிசம் மூலம் மனதில் உள்ளதையும், ஆழ்மனதிற்குத் தெளிவாகத் தெரிந்ததையும் சொல்லலாமே ஒழிய ஆழ்மனமே அறியாத இரகசியங்களை அறிந்து கொள்ளுதல் இந்த நிலைக்கு சாத்தியமல்ல. உதாரணத்திற்கு தன் கணவர் குணாதிசயங்கள் அந்தப் பெண்மணிக்கு நன்றாகத் தெரிந்து இருந்ததால் அந்தப் பெண்மணியின் கணவரின் முழு விவரங்களை மார்கரைட்டால் சொல்ல முடிந்தது. அதே போல் பால் ப்ரண்டனின் இலட்சியம் மற்றும் எண்ணங்கள் அவர் அறிந்திருந்ததால் அதையும் அவர் மனம் மூலம் மார்கரைட் அறிய முடிந்தது. பால் ப்ரண்டனின் எதிர்காலம் பால் ப்ரண்டனே அறியாத ஒரு இரகசியமாக இருந்ததால் மார்கரைட்டிற்கு அவர் மனம் மூலம் அதை அறிய முடியவில்லை. ஆனாலும் அவர் ஏதோ முயற்சி செய்து அது பொய்யாய் போயிருக்கிறது. எதிர்காலத்தை அறிய ஹிப்னாடிசத்தை விட உயரிய யோக நிலைக்குப் போனால் ஒழிய அது சாத்தியமில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்)

அடுத்ததாக ஹிப்னாடிசத்தின் மூன்றாம் நிலைக்குத் தன் மனைவியை எட்வர்டு அரெஸ் அழைத்துச் சென்றார். அந்த நிலையில் ஒரு கூர்மையான ஊசியை எடுத்து மார்கரைட்டின் கையில் குத்தினார். ஊசி அரையங்குலம் உள்ளே சென்றாலும் மார்கரைட் வலியை உணரவில்லை. மாறாக எட்வர்டு கேஸ் ஒரு கோமாளி எதிரே நின்று கொண்டு நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல மார்க்கரைட் விழுந்து விழுந்து சிரித்தார்.

அந்த ஊசியை வெளியே எடுத்த போது குத்திய இடத்தில் இருந்து ஒரு துளி இரத்தம் கூட வெளி வரவில்லை என்பது தான் ஆச்சரியம். குத்திய இடத்தில் அடையாளமாக ஒரு கரும்புள்ளி மட்டுமே தெரிந்தது.

பின்னர் எட்வர்டு அடெஸிடம் பேசும் போது இந்த அற்புதமான சக்திகளைப் பற்றி பால் ப்ரண்டன் கேட்டார். ஒரு காலத்தில் ஒரு கல்லூரியில் மனோதத்துவ விரிவுரையாளராக இருந்த எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “உண்மையை சொல்லப் போனால் இந்த சக்திகளைப் பற்றி முழுவதும் எனக்குத் தெரியும் என்று என்னால் சொல்ல முடியாது. ஏன் ஆகிறது, எதனால் ஆகிறது, எப்படி ஆகிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது மிகவும் கஷ்டம். ஆனால் ஒவ்வொருவரிடமும் இந்த சக்தி புதைந்து கிடக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சில பயிற்சிகள் மூலம், சில முறைகள் மூலம் அந்த சக்திகளை நம்மால் பயன்படுத்த முடிகிறது என்பது மட்டும் உண்மை”

”இதை உணர்ந்த போது நான் அந்த சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். நான் முன்பே சொன்னது போல ஆரம்பத்தில் என் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த நிறைய நேரம் தேவைப்பட்டது. அந்த நிறைய நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களுக்குள் அவளை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த முடிந்தது முறையான, தொடர்ந்த பயிற்சியால் தான். ஹிப்னாடிசத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனோநிலை உள்ளவர்களை மட்டுமே அதில் ஆழ்த்த முடியும். மேலும் ஹிப்னாடிசம் செய்பவர்களுக்கும் தங்கள் சக்தி மேல் முழு நம்பிக்கை இருந்தால் ஒழிய மற்றவர்களை ஹிப்னாடிசம் செய்ய முடியாது..”

பால் ப்ரண்டன் கேட்டார். “கண்களைக் கட்டிய பின்பும் அவரால் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிந்ததும், உங்கள் செயல்களைக் காண முடிந்ததும் எப்படி?”

எட்வர்டு அடெஸ் சொன்னார். “நம் ஐம்புலன்களும் வேலை செய்வது அந்தந்த உறுப்புகளால் தான் என்று நாம் எண்ணினாலும் நம்முடைய ஆழ்மனம் அந்த உறுப்புகளின் உதவியில்லாமலேயே அதை செய்ய முடிகிறது என்பதும் உண்மை தான். அதைத் தான் நீங்களே நேரில் பார்த்தீர்களே. ஆனால் நம் மேலோட்டமான மனதிற்கு அது சாத்தியமாவதில்லை. ஏனென்றால் நம் மேல்மனம் எத்தனையோ தவறான நம்மை மட்டுப்படுத்துகிற நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. ஆழ்மனதின் ஆதிக்கத்திற்குச் செல்லும் போது அந்த நம்பிக்கைகள் அறுபட்டுப் போகின்றன.”

பால் ப்ரண்டன் கேட்டார். “சிலர் ஹிப்னாடிசம் செய்யும் போது ஏதாவது சொல்லிக் கொண்டே கைகளை அசைத்து ஹிப்னாடிசம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அதெல்லாம் செய்யவில்லையே. அப்படி எல்லாம் செய்யத் தேவையில்லையா?”

”அது அந்தந்த நபர்களைப் பொறுத்தது. நான் என் உள்ளே உள்ள சக்தியை நம்புகிறேன். பயிற்சி பெற்றுத் தேர்ந்த பின் அவை அவசியமானதல்ல என்று நான் நினைக்கிறேன்”

எட்வர்டு அடெஸும், மார்கரைட்டும் சித்தர்கள் அல்ல என்றாலும் மனோவசியம் என்ற ஹிப்னாடிச அறிவியல் முறையில் பால் ப்ரண்டனுக்குச் செய்து காட்டிய பல சித்திகள் வியப்பளிக்க வைக்கின்றன அல்லவா?

அடுத்ததாக பால் ப்ரண்டன் சந்தித்த நபர் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு அவதூது. உடலெல்லாம் ஆணியாலும், கத்தியாலும் பல முறை குத்திக் கொண்டும் பாதிக்கப்படாமல் இருந்தவர். தண்ணீரினுள்ளும், மணலின் உள்ளும் மணிக்கணக்காய் ஒரு நாளுக்கும் மேல் புதைந்து கிடந்து பின் பாதிக்கப்படாமல் மேல் எழுந்தவர். பல சர்ச்சைகளில் பேசப்பட்டவர். ஆனால் அலட்சியமாக ஒதுக்க முடியாத மனிதராக அந்தக் காலத்தில் பலர் கவனத்தையும் கவர்ந்தவர். பால் ப்ரண்டன் அந்த அவதூதைக் காண ஆவலுடன் சென்றார்.

அந்த அவதூதர் யார் தெரியுமா?


(தேடல் தொடரும்)
நன்றி;என் கணேசன்                                                                                         


மீண்டுமொரு தேடல் 7



பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்





மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது, அற்புத சக்தி படைத்த ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் தம்பதிகளை. அந்தத் தம்பதிகள் கெய்ரோ நகரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் பெயர் எட்வர்டு அடெஸ் மற்றும் மேடம் மார்கரைட். எட்வர்டு அடெஸ் தன் மனைவியை ஹிப்னாடிசம் செய்து பல அற்புத செயல்களை நிகழ்த்த வல்லவராக இருந்தார்.

அவர்களை சந்திக்கச் செல்லும் முன் பால் ப்ரண்டன் இங்கிலாந்தைச் சேர்ந்த பெரிய அதிகாரியின் மனைவியையும் தன்னுடன் வரச் சொன்னார். அந்தப் பெண்மணி மனைவி இது போன்ற செயல்களை எப்போதும் சந்தேகக் கண்ணால் பார்ப்பவராக இருந்ததால் தாங்கள் காணப்போகும் நிகழ்ச்சிகளில் ஏதாவது ஏமாற்று வேலை இருந்தால் அவருடைய கூர்மையான பார்வைக்குத் தப்பாது என்று பால் ப்ரண்டன் எண்ணினார்.

எட்வர்டு அடெஸ் அவர்களை வரவேற்று நிறைய நேரம் தங்கள் இருவரைப் பற்றியும் சொன்னார். பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தால் மனிதர்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதைத் தங்கள் வாழ்வில் கண்டறிந்ததாகச் சொன்னார். மனிதன் தனக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை பகுத்தறிவு என்ற பெயரால் கண்டறியத் தவறுவதாகச் சொன்னார். அவருடைய மனைவி மார்கரைட் அதிகம் பேசாத அமைதியான நபராக இருந்தார்.

எட்வர்டு அடெஸ் ஆரம்பத்தில் தன் மனைவியை ஹிப்னாடிசத்தில் ஆழ்த்த தனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டதாகவும், தொடர்ந்த பயிற்சியால் இப்போது ஓரிரு நிமிடங்களே தேவைப்படுவதாகவும் சொன்னார்.

அவர் தன் வலது கட்டை விரலை தன் மனைவியின் இரு புருவங்களுக்கு இடையில் வைத்து மனைவியின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவர் சொன்னபடியே மார்கரைட் கண்கள் சொருகி உடனடியாக ஹிப்னாடிச உறக்கத்தில் ஆழ்ந்தார். பால் ப்ரண்டன் எழுந்து சென்று மார்கரைட்டின் கண்ணிமைகளை சற்று விலக்கிப் பார்த்தார். கண்மணிகள் நிஜமாகவே மேலே சென்றிருந்தன. இது அவர் முழு பிரக்ஞையில் இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கவே திருப்தியுற்ற பால் ப்ரண்டன் எட்வர்டு அடெஸிடம் தொடரச் சொன்னார்.

ஆரம்பத்தில் ஓரிரு எளிய ஹிப்னாடிச பயிற்சியாளர்கள் செய்யும் நிகழ்வுகளை செய்து காட்டிய எட்வர்டு அடெஸ் அடுத்தபடியாக பால் ப்ரண்டனிடம் மார்கரைட்டின் கண்களைக் கட்டச் சொன்னார்.

பால் ப்ரண்டன் மார்கரைட்டின் கண்களை டேப் போட்டு ஒட்டி வேறு ஒரு சிவந்த துணியால் நன்றாகக் கட்டியும் விட்டார். என்ன முயன்றாலும் கண்களைத் திறந்து பார்க்க இப்போது வழியில்லை. எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொன்னார். “என்னிடம் ஏதாவது செய்யுமாறு என் காதில் ரகசியமாகச் சொல்லுங்கள். நான் செய்கிறபடியே அவளையும் செய்யச் சொல்கிறேன்.”

பால் ப்ரண்டன் எட்வர்டு அடெஸிற்கு மட்டும் கேட்கும்படி காதில் சொன்னார். “வலது கையை உயர்த்துங்கள்”

வலது கையை உயர்த்தியபடியே எட்வர்டு அடெஸ் மனைவியிடம் சொன்னார். “நான் என்ன செய்கிறேனோ அப்படியே நீயும் செய்”

கண்கள் கட்டப்பட்டிருந்த மார்கரைட்டும் அப்படியே தன் வலது கையை உயர்த்தினார். பால் ப்ரண்டனும் அந்த ஆங்கில அதிகாரியின் மனைவியும் அந்த அதிசயத்தைப் பார்த்து திகைத்துப் போனார்கள்.

அந்த அதிகாரியின் மனைவியிடம் எட்வர்டு அடெஸ் சொன்னார். “இப்போது நீங்கள் எதாவது என் காதில் சொல்லுங்கள்”

அந்தப் பெண்மணி அவரிடம் ரகசியமாகச் சொன்னார். “இரண்டு கைகளின் விரல்களையும் பின்னி இணைத்துக் கொள்ளுங்கள்”

எட்வர்டு அடெஸ் அப்படியே விரல்களைப் பின்னி இணைத்துக் கொள்ள மார்கரைட் ஏதோ நேரில் பார்த்துச் செய்வது போல அப்படியே தன் இரு கைவிரல்களையும் பின்னிக் கொண்டார்.

வியப்பில் ஆழ்ந்த பால் ப்ரண்டன் மற்றும் அந்தப் பெண்மணியிடம் எட்வர்டு அடெஸ் சொன்னார். “நீங்கள் இது வரை பார்த்தது ஹிப்னாடிசத்தின் முதல் நிலை. இரண்டாவது நிலையில் ஆழ்மனம் இன்னும் நுணுக்கமாகவும் அற்புதமாகவும் வேலை செய்யும்.”

எட்வர்டு அடெஸ் தன் மனைவியை இரண்டாம் நிலை ஹிப்னாடிசத்திற்குக் கொண்டு செல்லவும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. மார்கரைட்டின் நெற்றியைத் தொட்டுக் கட்டளையிட்டார். பின் அவரை எழுந்து நாற்காலியில் அமரச் சொல்ல மார்கரைட்டும் அமர்ந்தார்.

அங்கு அலமாரியில் வைத்திருந்த பல புத்தகங்களில் ஒன்றை எடுத்துத் தரும்படி எட்வர்டு அடெஸ் பால் ப்ரண்டனிடம் சொல்ல பால் ப்ரண்டன் எழுந்து அந்த அலமாரியில் இருந்து ஒரு பிரெஞ்சு அறிவியல் புத்தகத்தை எடுத்தார். எட்வர்டு அடெஸ் “அதில் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏதாவது ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்” என்று சொல்ல பால் ப்ரண்டன் 53ஆம் பக்கத்தில் ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.

அடெஸ் மனைவியிடம் “அவர் தேர்ந்தெடுத்த பத்தியை அப்படியே பார்த்து எழுது” என்று சொல்லி ஒரு வெள்ளைத் தாளையும் ஒரு பென்சிலையும் தர மார்கரைட் மூடிய கண்களுடன் அந்தப் புத்தகத்தைப் பார்த்து பின் அந்தத் தாளில் எழுத ஆரம்பிக்க பால் ப்ரண்டனும், அந்தப் பெண்மணியும் பிரமித்துப் போனார்கள். பால் ப்ரண்டன் சென்று மீண்டும் மார்கரைட்டின் கண்கள் முழுமையாகத் தெரியாதபடி கட்டப்பட்டு இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொண்டார். இரண்டிரண்டு திரைகளால் அந்தக் கண்கள் மறைக்கப்பட்டிருந்தது உண்மை தான். ஆனாலும் மார்கரைட் இரண்டு மூன்று சொற்களை எழுதி விட்டு மறுபடியும் அந்தப் பக்கத்தைப் பார்த்து மறுபடி திரும்பி தாளில் எழுதுவது என்று பார்த்து எழுதுபவர்களைப் போலவே நடந்து கொண்டார்.



மார்கரைட் எழுதியதில் ஒரே ஒரு சொல்லில் வந்த ஒரு சிறிய எழுத்துப் பிழை தவிர மீதி எல்லாம் அப்படியே எழுதப்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அந்தப் பத்தியில் இரண்டாவது வரியில் இரண்டாவது சொல்லையும், மூன்றாவது வரியில் மூன்றாவது சொல்லையும் கோடிடச் சொன்னார். கண்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் மார்கரைட் அப்படியே அந்த சொற்களைக் கோடிட்டுக் காட்டினார்.

எட்வர்டு அடெஸ் அந்தப் பத்தியை இடது கையால் எழுதிக் காட்டச் சொன்னார். இயல்பில் வலது கையால் எழுதும் பழக்கம் உடைய மார்கரைட் சிறிதும் தயக்கமில்லாமல் இடது கையால் எழுத ஆரம்பிக்க, வலது கையில் எழுதுபவர்களுக்கு இடது கையால் எழுதுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்த பால் ப்ரண்டனும் அந்த ஆங்கில அதிகாரியின் மனைவியும் திகைப்பின் உச்சத்திற்கே சென்றார்கள்.





( தேடல் தொடரும்)












நன்றி;என்;கணேசன்