Total Pageviews

Monday, December 5, 2011

"நான்" "தான்"





என்னுள் இருப்பது இரண்டு ‘நான்’கள்
என்னையே கேட்டேன் எண்ணிலா ‘ஏன்’கள்

நான் என்பது முரண்பாட் டுருவம்
நானும் நானும் எதிரெதிர் துருவம்

பொய்யைச் சொல்லி உதவியும் செய்வேன்
மெய்யைச் சொல்லி மாட்டியும் கொள்வேன்

புதுமை கண்டு போற்றவும் செய்வேன்
பழமை கண்டும் வியந்தும் போவேன்

முதிர்ந்த அறிவுடன் கருத்தும் சொல்வேன்
முட்டாள் தனமாய் நடந்தும் கொள்வேன்

தெளிந்த கருத்தில் குழப்பம் அடைவேன்
குழம்பிய நிலையில் தெளிவும் பெறுவேன்

கண்டதை எழுதி கவிதை என்பேன்
கவிதை படைத்துக் குப்பை என்பேன்

சிறுமை கண்டு சீறவும் செய்வேன்
துரோகம் கண்டு ஒதுங்கியும் செல்வேன்

வறியவர் கண்டு வாடவும் செய்வேன்
வறுமை கண்டு ஓடவும் செய்வேன்

பாசம் கண்டு உருகியும் விடுவேன்
அதே பாசத்தால் இருகியும் விடுவேன்

இயந்திர ஒலியில் இசையை உணர்வேன்
இசையைக் கூட இரைச்சல் என்பேன்

காதலை ஒருநாள் கடவுள் என்பேன்
காமம் என்று மறுநாள் சொல்வேன்

அடக்கம் ஒரு நானில் அடங்கி இருக்கும்
ஆணவம் இன்னொரு நானில் அடக்க நினைக்கும்

நானே வெல்வேன்! நானே தோற்பேன்!
நானின் தன்மை அறியா தலைந்தேன்

எதிரெதிர் ‘நான்’கள் என்னுள் இயங்கும்
ஏனெனச் சொன்னால் இதயம் வணங்கும்.

No comments:

Post a Comment