ஒரு பெரிய பணக்காரர். பிரம்மாண்டமான கோட்டைபோன்ற வீட்டில் சில நூறு வேலைக்காரர்களுடைய கவனிப்பில் ராஜாபோல வாழ்ந்தார். அழகான மனைவி. இரண்டு குழந்தைகள். குறையில்லாத வாழ்க்கை.ஆனால் ஏனோ, கொஞ்சநாளாக அவருக்கு மனத்தில் நிம்மதி இல்லை.
ஞானத்தைத் தேடிப் பயணம் புறப்பட்டார்.சாதாரணமாக ஞானம் தேடிச் செல்கிறவர்கள் நடந்துபோவார்கள். இவர் பணக்காரராச்சே. பெரிய குதிரைவண்டியில் கிளம்பினார். ஒவ்வோர் ஊராகச் சென்று அங்குள்ள ஞானிகள், துறவிகள், ஆசிரியர்களைச் சந்தித்து அவர்கள் காலில் தங்கத்தையும் வைரத்தையும் கொட்டினார். தனக்கு ஞானம் பெற்றுத் தருமாறு வேண்டினார்.
ஆனால் இவர்கள் யாராலும் அந்தப் பணக்காரருக்கு உதவ முடியவில்லை. காட்டின் உள்பகுதியில் வாழும் ஒரு அவதூதரைக் கை காட்டினார்கள். ‘அவராலதான் உன் பிரச்னையைத் தீர்க்கமுடியும்!’நம் ஆள் யோசித்தார். ஒரு மூட்டை நிறையப் பணத்தை எடுத்துக்கொண்டார்.
குதிரை ஒன்றில் ஏறிக்கொண்டார். காட்டுக்குள் சென்றார்.பல நாள் அலைச்சலுக்குப்பிறகு அவர் அந்த அவதூதர் வாழும் குகையைக் கண்டுபிடித்துவிட்டார். உள்ளே சென்று அவரை வணங்கி விஷயத்தைச் சொன்னார்.துறவி கேட்டார்.
‘நீ எப்படி இங்கே வந்தே?’
‘குதிரையில வந்தேன்!’
‘அப்படீன்னா நீ ஏன் ஞானத்தைத் தேடுறே? முதல்ல ஒரு குதிரையைத் தேடவேண்டியதுதானே?’’
என்ன சாமி புரியாமப் பேசறீங்க? என்கிட்டதான் ஏற்கெனவே குதிரை இருக்கே, அதைத் தேடி நான் ஏன் அலையணும்?’’
அதேமாதிரிதான் ஞானமும். அது ஏற்கெனவே உன்கிட்ட இருக்கு. அதைத்தேடி வெளியே அலைஞ்சு பிரயோஜனமில்லை. உனக்குள்ளேயே தேடத் தெரிஞ்சுக்கோ’ என்றார் அந்த ஞானி.
அவர் கொண்டுவந்திருந்த பணம், நகைகளையெல்லாம் ஏறிட்டும் பார்க்காமல் குகைக்குள் திரும்பிச் சென்றுவிட்டார்!
1 comment:
How can people who has no knowledge about yoga, can realise ஞானம் ???
Hari nithya
Post a Comment